முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் உள்பட ராணுவ உயரதிகாரிகள் சென்ற ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகத்துடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6.30 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.
வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கோவையிலிருந்து சூலூர் சென்ற விமானப் படை ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளானது.
இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் சென்றனர். காலை 11 மணியளவில் சென்ற விமானம் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். விமானி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சக குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்கிறார். அவரது இல்லத்தில் நடைபெறும் இந்த அவசரக் கூட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விவாதிக்கப்படுகிறது.