சுங்கச்சாவடிகளில், பிப்.16-ஆம் தேதி முதல் பாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்ததையடுத்து, இல்லாத வாகன ஓட்டிகள், சுங்கச்சாவடிகளில் இரு மடங்குத் தொகையை செலுத்திச் செல்லும் நிலை ஏற்பட்டது.
பாஸ்டேக் மூலமாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டது.
சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்து நிற்காமல் பயணம் செய்ய வசதியாக ‘பாஸ்டேக்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட தொகை செலுத்தி அந்த வில்லைகளைப் பெற்று வாகனங்களில் ஒட்டிக் கொண்டால், சுங்கச்சாவடிகளை வாகனம் கடக்கும்போது மின்னணு கருவி மூலம் அந்த வாகனத்துக்கான கட்டணம் தானியங்கி முறையில் பிடித்தம் செய்யப்படும். இந்தமுறைக்கு வாகன உரிமையாளா்கள் மாறுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் பல்வேறு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் திங்கள்கிழமை (பிப்.15) நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ‘பாஸ்டேக்’ முறை கட்டாயம் எனவும் பாஸ்டேக் பயன்படுத்தாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதைத் தவிா்ப்பதற்காக திங்கள்கிழமை காலை முதல் சுங்கச்சாவடிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் பாஸ்டேக் வில்லை விற்பனை முகாம்களில், வில்லைகளை வாங்குவதற்கு வாகன உரிமையாளா்கள் காத்து இருந்தனா்.
அவா்களுக்கு பாஸ்டேக் வில்லைகளைப் பயன்படுத்தும் முறை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இவ்வாறு தானாகவே கட்டணம் பிடித்தம் செய்யும் தொழில்நுட்பத்தை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், பாஸ்டேக் வில்லைகளை ஒட்டாத வாகனங்கள், சுங்கச்சாவடிகளைக் கடக்கும் போது இரு மடங்கு அபராதத் தொகையை செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.