உலக நாடுகளுக்குச் செல்லும் பிரதமர் மோடியால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை சந்திக்க முடியவில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் நடைபெற்ற மகா பஞ்சாயத்து கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் மத்திய அரசை விமர்சித்து பேசினார். விவசாயிகளிடையே பேசிய அவர், "தில்லிக்கு அருகில் 90 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் 215 விவசாயிகள் இறந்தனர். அவர்களுக்கு மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் நிறுத்தப்பட்டது. அவர்கள் மத்திய அரசால் தாக்கப்பட்டனர் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் தாக்குதலின் போதும் அவர்கள் அமைதியாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தில்லியின் எல்லைகள் சர்வதேச எல்லைகளாக மாற்றப்பட்டன. தொடர்ந்து விவசாயிகள் பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படுகின்றனர். பல்வேறு உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடியால் தில்லியில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்க முடியவில்லை” என்று தெரிவித்தார்.