புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி பூட்டா சிங்கின் மறைவிற்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் பூடா சிங் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 86.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுயநினைவிழந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூடா சிங் இன்று அதிகாலை 5.30 மணிக்கு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பதிவில், “அனுபவம் வாய்ந்த நிர்வாகியாகத் திகழ்ந்த பூட்டா சிங், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் குரல் கொடுத்தார். அன்னாரது மறைவினால் ஆழ்ந்த துயருற்றேன். அவரது குடும்பத்தார் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கல்கள்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான பூடா சிங் 1986 முதல் 1989ஆம் ஆண்டு வரை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.
1984 - 1986ஆம் ஆண்டு வரை மத்திய வேளாண்துறை அமைச்சராகவும், 2004-2006 வரை பிகார் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.