பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக 10 காகங்கள் இறந்தது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மற்ற மாநிலங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மாநில அரசுகள் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பறவைக் காய்ச்சலைக் கண்காணிக்க மத்திய அரசு சார்பில் தில்லியில் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள மாநிலங்களில் மத்தியக் குழுவினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் 10 காகங்கள் இறந்துள்ளன. பறவைக் காய்ச்சலால் காகங்கள் இறந்தனவா என்பது குறித்து தெரிந்துகொள்ளும் வகையில் பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
எனினும் உத்தரப் பிரதேசத்தில் நிலவும் கடும் குளிர் மற்றும் காற்று மாசு காரணமாகவும் காகங்கள் இறந்திருக்கலாம் என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.