கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய பாதுகாப்பு மற்றும் ஆயுஷ் துறைகளின் இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கின் (68) உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய இணையமைச்சர் நாயக், தனது மனைவி விஜயா நாயக், உதவியாளர் தீபக் ராமதாஸ் ஆகியோருடன் கர்நாடக மாநிலம் எல்லாப்பூரிலிருந்து கோர்கா்ணாவுக்கு காரில் திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தபோது, அங்கோலா வட்டம், ஹொசகம்பி கிராமத்தின் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஸ்ரீபாத் நாயக்கின் மனைவி விஜயா, உதவியாளர் தீபக் ராமதாஸ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த நாயக், முதலில் அங்கோலாவில் உள்ள மருத்துவமனையிலும் பின்னர் கோவா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாயக்கின் உடல்நிலை குறித்து கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நேற்றைய (புதன்கிழமை) தினத்தைக் காட்டிலும் நலமாக இருப்பதாகவும், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.