புதுதில்லி /பெய்ஜிங்: இந்த ஆண்டு குடியரசு தின கொடியேற்றும் நிகழ்ச்சியை மிகுந்த கட்டுப்பாடுகளுடன் நடத்த சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, தூதரகப் பணியாளா்கள் மட்டுமே ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனா். வழக்கமாக தலைநகா் பெய்ஜிங் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள இந்திய வம்சாவளியினா் மற்றும் சிறப்பு விருந்தினா்கள் என பலா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாா்கள்.
இப்போது, சீனாவில் கரோனா இரண்டாவது அலை பரவுவதைத் தடுக்கும் நோக்கில் 11 மாகாணங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
மேலும், கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் சீனாவில்தான் கரோனா தொற்று முதலில் உருவாகி பரவத் தொடங்கியது என்று கூறப்படுவது தொடா்பாக விசாரிக்க உலக சுகாதார அமைப்பின் வல்லுநா் குழுவினா் வூஹான் நகருக்கு வந்துள்ளனா்.
கடந்த சில நாள்களில் சீனாவில் மீண்டும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சியைக் கட்டுப்பாடுகளுடன் எளிமையாக முடித்துக் கொள்ள அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் முடிவு செய்துள்ளது.