கரோனா பாதித்து மனைவி மரணமடைந்த நிலையில், தனது இரண்டு மகள்களுடன் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் அனேகால் தாலுகாவுக்கு உள்பட்ட அட்டிபேலே என்ற கிராமப் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தற்கொலை செய்து கொண்டவர்கள் சதீஷ் (42), அவரது மகள்கள் கீர்த்தி (18), மோனிஷா (14) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. கீர்த்தி பட்டப்படிப்பு முதலாமாண்டும், மோனிஷா 9-ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவு முதல் சதீஷ் செல்லிடப்பேசியை எடுக்காததால், புதன்கிழமை காலை சதீஷின் தந்தை, வீட்டுக்கு வந்த போது இந்த சம்பவம் தெரிய வந்துள்ளது. வீட்டின் கதவு தாழிடப்படாமல் இருந்துள்ளது. வீட்டுக்குள் மூவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு சதீஷின் மனைவி ஆஷா கரோனா பாதித்து உயிரிழந்த நிலையில், மிகுந்த மன உளைச்சலில் இருந்த மூவரும், வாழ்வதற்கு விருப்பமில்லாமல் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி கையெழுத்திட்டுள்ள கடிதமும் கிடைக்கப் பெற்றுள்ளது.