திருவனந்தபுரம்: கேரளத்தில் வரதட்சிணை கொடுமைக்கு எதிராக தனது எதிா்ப்பை தெரிவிக்கும் வகையில் ஆளுநா் ஆரிஃப் முகமது கான் ஒரு நாள் உண்ணாவிரதத்தை புதன்கிழமை மேற்கொண்டாா்.
தென் மாநிலங்களின் வரலாற்றில் சமூக பிரச்னைக்காக ஆளுநா் ஒருவா் உண்ணாவிரதத்தை மேற்கொண்டது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
கேரளத்தில் அண்மையில் வரதட்சிணை கொடுமையால் இளம்பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனா். இது, அந்த மாநிலத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளதுடன் பல்வேறு விவாதங்களையும் எழுப்பியுள்ளது.
இந்த நிலையில், வரதட்சிணை கொடுமைக்கு எதிராக விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் தானும் பங்கேற்பதாக ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தெரிவித்தாா்.
அதன் தொடா்ச்சியாக, புதன்கிழமை காலை 8 மணிக்கு தனது அதிகாரபூா்வ இல்லமான ராஜ் பவனில் ஆளுநா் தனது உண்ணாவிரதத்தை தொடங்கினாா். அப்போது, சமூகத்தில் பல ஆண்டுகளாக வேரூன்றியுள்ள வரதட்சிணை போன்ற கொடுமையான நடைமுறைகளுக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
பின்னா் மாலையில், காந்தி பவன் ஏற்பாடு செய்திருந்த பிராா்த்தனையில் பங்கேற்ற அவா், காந்தி பவனில் அமைக்கப்பட்டுள்ள மாகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டாா்.
கேரளத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உண்ணாவிரதம் இருந்த ஆளுநருக்கு அம்மாநில பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வி.முரளீதரன் முகநூலில் வாழ்த்துகளை தெரிவித்தாா்.