பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் கரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக செயல்படுத்தவில்லை என கேரள உயர்நீதிமன்றம் அம்மாநில அரசைக் கடுமையாக விமரிசித்துள்ளது.
கரோனா மிக மோசமாக பாதித்த மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. நேற்றைய தினம் (வியாழக்கிழமை) அங்கு 15,637 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,974 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், 128 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக சராசரியாக ஒருநாளில் கரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10,000 முதல் 15,000 ஆக உள்ளது.
கரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை விகிதம் 10.03 சதவிகிதமாக உள்ளது. அங்கு தற்போது 1,17,708 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். கரோனாவினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,938ல ஆக உள்ளது.
இந்நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஆடை நிறுவனங்களை திறக்க அனுமதிகோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஆர்.ரவி, கடைகள் திறப்பது குறித்து கேரள அரசு கொள்கை முடிவு எடுக்கும் நேரம் இது என்றும் இந்த வழக்கு குறித்து வருகிற வியாழக்கிழமை பதிலளிக்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும், பொது இடங்களில் சமூக இடைவெளி முறையாகக் கடைபிடிக்கவில்லை. அவர்கள் முகக்கவசம் மட்டும் அணிந்திருக்கிறார்கள். இதுதான் கேரளாவில் பொது இடங்களில் நடைபெறுகிறது என வருத்தம் தெரிவித்தார்.