கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிக்கு காவல்துறை ஆய்வாளர் கேக் ஊட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த டேனிஷ் ஷேக் என்பவர் மீது பல குற்ற வழக்குகள் நிலவையில் உள்ளன. குறிப்பாக, கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி, அவரை ஜோகேஸ்வரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனிடயையே, ஜோகேஸ்வரி காவல்நிலை மூத்த ஆய்வாளரான மகேந்திர நெர்லேகர், டேனிஷ் ஷேக்கின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது, அவருக்கு கேக் ஊட்டியுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற இச்சம்பவம் குறித்த விடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
காவலர் ஊடையில் இருக்கும் நெர்லேகர் ஷேக்கிற்கு கேக் ஊட்டுவது போன்ற விடியோ வெளியாகி பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து நெர்லேகரிடம் கேட்டபோது, "அது பழைய வீடியோ. கட்டடத்தை இடிக்கும் பணிகளை ஆராய்வதற்காக காலனிக்கு சென்றிருந்தேன். அப்போது, அங்குள்ள மக்கள் வீட்டு வசத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். ஷேக் அங்கிருக்கிறார் என்பது எனக்கு தெரியாது" என்றார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெறும் என மண்டல துணை காவல் ஆணையர் மகேஷ் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.