கரோனா தொற்று பரவலுக்கு கும்பமேளாவை காரணமாகக் குறிப்பிடுபவர்கள் தேசவிரோதிகள் என உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் தீரத் சிங் ராவத் தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கரோனா இரண்டாம் அலையின் மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கும்பமேளா விழா பலத்த சர்ச்சையக் கிளப்பியது. தொற்று பரவல் தீவிரமடைந்து வந்த நிலையில் மாநில அரசு அலட்சியமாக செயல்படுவதாக விமர்சனம் எழுந்தது.
மேலும் கும்பமேளாவில் பங்கேற்ற பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு மாநில அரசுகளும் அந்த விழாவில் பங்கேற்றவர்கள் தங்களைக் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ளவும் உத்தரவிட்டன.
இந்நிலையில் உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான தீரத் சிங் ராவத் கரோனா இரண்டாம் அலை பாதிப்பிற்கு கும்பமேளாவை குற்றம்சாட்டுபவர்கள் தேசவிரோதிகள் எனத் தெரிவித்துள்ளார்.
கும்பமேளா தான் காரணமென்றால் கேரளத்திலும், மகாராஷ்டிரத்திலும், பஞ்சாபிலும்,தில்லியிலும் எப்படி கரோனா எண்ணிக்கை அதிகரித்தது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் ஒருசிலர் தொடர்ந்து நாட்டிற்கு எதிராகவும், இந்துத்துவத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த ராவத் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பியதே கரோனா பரவலுக்கு காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஹரித்வார் கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு போலியான நெகடிவ் சான்றிதழ் வழங்கிய ஆய்வுக் கூடங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.