சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு எதனடிப்படையில் மதிப்பெண் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து 2 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரி முன்பு வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக தற்போது விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம்,
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களின் நலனில் சமரசம் செய்துகொள்ள முடியாது என்று மத்திய அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று தெரிவித்தது.
இது தொடர்பாக ஆஜரான மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், 3 வாரங்களில் அனைத்து விவகாரங்களிலும் விரைந்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
எனினும், சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக குறைந்தபட்சம் 2 வாரங்களில் அனைத்து முடிவுகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுகள், மாநிலப் பாடத்திட்ட பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்யும் மாநில அரசுகளுக்கும் வழிகாட்டியாய் அமையும் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.