பிகார் மாநிலத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சருக்கு பதிலாக அவரின் சகோதரர் விருந்தினராக பங்கேற்றது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பிகார் மாநிலத்தின் வனவிலங்குகள் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் முகேஷ் சகானி. இவர் வெள்ளிக்கிழமை வைஷாலி மாவட்டத்தின் ஹாஜிபூர் நகரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதாக இருந்தது.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக அவருக்கு பதிலாக அவரது சகோதரர் சந்தோஷ் குமார் சஹானி அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பேசிய சந்தோஷ்குமார் சஹானி, “அமைச்சர் வேலையாக இருப்பதால் அவருக்கு பதிலாக நான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்” எனத் தெரிவித்தார்.
இந்தப் பிரச்னையை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்த மாநில முதல்வர் நிதிஷ்குமார், “இது அதிர்ச்சியளிக்கிறது. நடந்த சம்பவம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இப்படி நடந்திருக்கக் கூடாது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.