விரைவில் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி சோதனை: நிதி ஆயோக் தகவல்
இந்தியாவில் குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி சோதனைகள் விரைவில் தொடங்க உள்ளதாக நிதி ஆயோக் தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாக பல்வேறு மாநிலங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கரோனா மூன்றாம் அலை வரவிருப்பதாகவும் அது குழந்தைகளை அதிகம் தாக்கவிருப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
எனவே, குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கை வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் கரோனா தடுப்பூசி குறித்த பல்வேறு கோரிக்கைகள், குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள நிதி ஆயோக், 'வாட்ஸ்ஆப்பில் வெளியாகும் பீதியின் அடிப்படையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடா முடிவு செய்யக்கூடாது. இதை வைத்து சில அரசியல்வாதிகள் அரசியல் செய்ய விரும்புகின்றனர். சோதனைகளின் அடிப்படையில் போதுமான தரவுகள் கிடைத்தபிறகு விஞ்ஞானிகள் இதுகுறித்து முடிவு செய்வார்கள்.
மேலும், இப்போதைக்கு உலகில் எந்த நாடும் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்கவில்லை. மேலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து உலக சுகாதார நிறுவனம் இதுவரை எந்த பரிந்துரையும் அளிக்கவில்லை. குழந்தைகளில் தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.
எனவே,ஆய்வுகளுக்குப் பின்னர் விரைவில் குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி சோதனை தொடங்கும்' என்று விளக்கம் அளித்துள்ளது.