கேரளத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கான 10% சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதன் மூலம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு முறையை நீக்கும் நோக்கம் அரசுக்கு கிடையாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பொதுப் பிரிவில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பிரிவினர் குறித்த தகவல்களை சேகரிப்பதற்கான மாநில அளவிலான கணக்கெடுப்பை முதல்வர் பினராயி விஜயன் தொடக்கி வைத்தார்.
இதன்பிறகு, அவர் பேசியது, "ஏற்கெனவே நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு முறையை மறைமுகமாக நீக்கவே பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை அரசு அமல்படுத்துவதாக சிலர் வாதிடுகின்றனர். ஆனால், அப்படி ஒன்றும் கிடையாது.
ஏற்கெனவே பலன்களை அனுபவித்து வரும் மற்ற பிரிவினரின் இட ஒதுக்கீட்டை நீக்குவதற்காக இது அமல்படுத்தவில்லை. சமூகத்தில் அனைவரும் சிறந்த வாழ்வியல் சூழல் அடைவதை உறுதி செய்யவே இது அமல்படுத்தப்படுகிறதுது.
பொதுப் பிரிவில் இருக்கும் சில பிரிவினரும் கடுமையான ஏழ்மையில் உள்ளனர். அவர்கள் இட ஒதுக்கீட்டின் எந்தப் பலன்களையும் அனுபவிக்கவில்லை. அதுபோன்ற மக்களுக்காகவே 10 சதவிகித (அரசுப் பணிகளில்) இடஒதுக்கீடு கோரிக்கையை அரசு பரிசீலிக்கிறது.
இதை உணர்வுப்பூர்வப் பிரச்னையாக மாற்றி பிரிவினையை உண்டாக்க முயற்சிப்பவர்களே, உண்மையான பிரச்னைகளிலிலிருந்து கவனத்தைத் திசை திருப்புகின்றனர்" என்றார் முதல்வர் பினராயி விஜயன்.