நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் மாநிலங்களவை கட்சித் தலைவர்களுடன் நவம்பர் 28ஆம் தேதி அவைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் நவ. 29-ஆம் தேதி முதல் டிச.23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதையொட்டி நவ. 28-ஆம் தேதி மாநிலங்களவை கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அவைத் தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம் அவரின் இல்லத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்கு முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில் அரசு சாா்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி ஆகியோா் கலந்துகொள்ளவுள்ளனா்.