எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததையடுத்து மக்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், திரிணமூல், சிவசேனை கட்சிகளைச் சோ்ந்த தலா இரு எம்.பி.க்களும், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த தலா ஒரு எம்.பி.யும் மாநிலங்களவையிலிருந்து இடைநீக்கம் செய்வதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்களவையின் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனை உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் இரு அவைகளிலிருந்தும் வெளிநடப்பு செய்தனர்.
இதனால், மக்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.