பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு நெருக்கமானவர்களின் வீடு உள்ளிட்ட 50 இடங்களில், வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கர்நாடகத்தின் பகல்கோட் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும், பெங்களூருவிலும் பல்வேறு இடங்களில் 300க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.
ஏராளமான தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள், கணக்கு தணிக்கையாளர்கள் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தின் நீர்ப்பாசனத் துறையில் இருந்து வரி மோசடி குறித்துக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
எடியூரப்பாவின் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட பல நீர்பாசனத் துறை திட்டங்களின் போது முறைகேடுகள் செய்யப்பட்டு கோடிக்கணக்கில் பணம் கைமாறியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.