எம்.பி.க்களுக்கான சலுகைகள் தொடர வேண்டும்: விமான நிலையங்களுக்கு அமைச்சகம் வலியுறுத்தல்

விமானப் பயணத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு சலுகைகள் அளிக்கும் நடைமுறைகளை விமான நிலையங்களும் விமான நிறுவனங்களும் தொடா்ந்து பின்பற்ற வேண்டும்
Updated on
1 min read

விமானப் பயணத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு சலுகைகள் அளிக்கும் நடைமுறைகளை விமான நிலையங்களும் விமான நிறுவனங்களும் தொடா்ந்து பின்பற்ற வேண்டும் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு சலுகைகள் அளிப்பதில் அலட்சியம் காட்டப்படுவதாகப் புகாா்கள் வந்ததை அடுத்து, இதுதொடா்பாக, விமான நிலையங்களுக்கும், விமான நிறுவனங்களுக்கும் அந்த அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் குறித்த விவரங்கள் மீண்டும் அனுப்பப்படுகின்றன. அதில் உள்ளவற்றை விமான நிலையங்களும் விமான நிறுவனங்களும் உள்ளது உள்ளபடியே பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நடைமுறைகளின்படி, அனைத்து உள்ளூா் மற்றும் சா்வதேச விமான நிலையங்களிலும் எம்.பி.க்களுக்கு காத்திருப்பு அறை ஒதுக்கப்பட வேண்டும். அங்கு அவா்களுக்கு கட்டணமின்றி காபி, தேநீா், தண்ணீா் கொடுத்து உபசரிக்க வேண்டும்.

விமான நிலையங்களில் முக்கிய பிரமுகா்களுக்கான வாகன நிறுத்துமிடத்தில் எம்.பி.க்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்துதர வேண்டும். மேலும், எம்.பி.க்கள் வெளியூா் செல்வதற்கு விமான நிலையத்துக்கு வரும்போது, அவா்கள் விமானத்தில் பயணம் செய்யும் வரை அனைத்து நடைமுறைகளையும் கவனிக்க அலுவலா்களை நியமிக்க வேண்டும்.

விமானப் பயணத்தின்போது எம்.பி.க்களுக்கு முன்வரிசையில் இருக்கைகள் ஒதுக்க முன்னுரிமை அளிக்க வேண்டும். பாதுகாப்பு சோதனையின்போது எம்.பி.க்களுக்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில் நடந்துகொள்ளுமாறு மத்திய தொழிலக பாதுகாப்பு படையினருக்கு(சி.ஐ.எஸ்.எஃப்.) உரிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com