லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவைச் சேர்ந்த 17 வயது சிறுமியின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் சுமார் 2 கிலோ எடை கொண்ட தலைமுடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
மிகச் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை லக்னௌவின் பல்ராம்பூர் மருத்துவமனை மருத்துவர்கள் குழு வியாழக்கிழமை நடத்தியுள்ளது.
பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி, கடும் வயிற்று வலி மற்றும் ஜீரணக் கோளாறுகளுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். மருத்துவப் பரிசோதனையில், அடையாளம் காணப்படாத ஏதோ ஒரு உருளை வயிற்றுப் பகுதியில் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் குழுவின் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். சமத்தர் இதுபற்றி கூறுகையில், என்டோஸ்கோபி செய்து பார்த்ததில், அந்த சிறுமியின் வயிற்றில் தலைமுடி பந்துபோல திரண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி அவ்வப்போது தனது தலைமுடியை பிய்து அதனை வாயில் வைத்து மெல்லும் பழக்கம் இருந்துள்ளது. அது அப்படியே வயிற்றுக்குள் நுழைந்துள்ளது. இது பொதுவாக மனநிலை பாதித்தவர்களுக்கு இருக்கும் பழக்கம். இதனை அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்துள்ளார்.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, வயிற்றிலிருந்து சுமார் 20 X 15 செ.மீ. அளவுள்ள தலைமுடிப் பந்தை அகற்றினோம். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அந்த தலைமுடிப் பந்தின் எடை சுமார் 2 கிலோ எடையுடன் இருந்தது. அவர் குணமடைய 10 நாள்கள் ஆகலாம். அவருக்கு மனநல ஆலோசனை வழங்கவும் பரிந்துரை செய்துள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.