கரோனா நெருக்கடியின்போது, அரசு மேற்கொண்ட அனைத்து திட்டங்களிலும் ஏழை மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்ட பயனாளிகளிடம் பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) உரையாடினார். அப்போது பேசிய அவர், கரோனா நெருக்கடியின்போது, அரசு மேற்கொண்ட அனைத்து திட்டங்களிலும் ஏழை மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது என பெருமிதம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "கரோனா பேரிடரின்போது, 80 கோடி இந்தியர்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளில், மனித இனம் சந்தித்திராத பேரிடர் கரோனா பெருந்தொற்று.
முகக்கவசம் அணிவது, கைகளை சானிடைசர் போட்டு கழுவுவது, தனி மனித இடைவெளியை கடைபிடித்து போன்றவற்றை மக்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா, பிரதான் மந்திரி ரோஸ்கர் யோஜனா உள்ளிட்ட திட்டங்களில் ஏழை மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. முதல் நாளிலிருந்தே, ஏழை மக்களின் உணவு மற்றும் வேலைவாய்ப்புகளில் கவனம் செலுத்தப்பட்டது" என்றார்.