'எங்கள் பேச்சைக் கேளுங்கள் மோடி': எதிர்க்கட்சிகள் விடியோ வெளியீடு
பெகாஸஸ் உளவு பார்க்கப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மாநிலங்களவையில் பேசியது விடியோவாக தொகுக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விடியோவை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் ட்விட்டர் கணக்கிலிருந்து வெளியிடப்பட்டது. அந்த விடியோவுடன் "மோடி அவர்களே, நாங்கள் பேசுவதைக் கேளுங்கள்" என்றும் பதிவிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இனி வாட்ஸ் அப்பில் கரோனா தடுப்பூசி சான்றிதழ்
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ட்விட்டர் பக்கத்தில் விடியோவை வெளியிட்டு பதிவிட்டுள்ளது:
"நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்குப் பதிலளிக்க பிரதமர் ஏன் ஆர்வம் காட்ட மறுக்கிறார்? நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயார். ஆனால், மத்திய பாஜக அரசு நாடாளுமன்ற செயல்பாடுகளை முடக்குகிறது. இதனால், மக்களுக்கு உண்மை சென்றடைவதில்லை."
இந்த விடியோவில் எதிர்க்கட்சித் தலைவர்களின், விவசாயிகள் மற்றும் பெகாஸஸ் சொற்கள் அடங்கிய பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. திமுக, காங்கிரஸ், சமாஜவாதி, ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் விவாதித்த காட்சிகள் விடியோவில் இடம்பெற்றுள்ளன.