பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை இன்று தில்லியில் சந்திக்கிறார்.
மாநில அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் மறுசீரமைப்பு குறித்து அவர் காங்கிரஸ் தலைவரிடம் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே சுனில் ஜாகருக்குப் பதிலாக நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக கடந்த மாதம் பொறுப்பேற்றார்.
அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு மாநில அரசும் கட்சித் தலைமையும் ஒற்றுமையாக செயல்படும் என்று அமரீந்தர் சிங் கூறியிருந்தார்.
பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்ட பிறகு சோனியா காந்தி - அமரீந்தர் சிங் இடையேயான முதல் சந்திப்பு இதுவாகும்.
முன்னதாக வியாழக்கிழமை, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.