வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான வழக்குகளில் விசாரணை மிகவும் மோசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூடுதல் அமர்வு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் விசாரணை மிக மோசமாக நடத்தப்பட்டுள்ளது என தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு, பிப்ரவரி 25ஆம் தேதி, மதக் கலவரங்கள் நிகழ்ந்தபோது காவல்துறையினர் மீது அஷ்ரப் அலி என்பவர் ஆசிட் வீச முயன்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பான வழக்கின் விசாரணையில் கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் யாதவ் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "கலவரம், வன்முறை தொடர்பான பல்வேறு வழக்குகளில் விசாரணை என்பது மிகவும் மோசமாக நடைபெற்றிருப்பதை மனவேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன். பெரும்பாலான வழக்குகளில் விசாரணை அலுவலர்கள் ஆஜராகவேவில்லை.
அரைகுறையான குற்ற பத்திரிகைகளை தாக்கல் செய்துவிட்டு விசாரணை முறையாக நடைபெறுகிறதா என்ற கவலைக் கூட அவர்களுக்கு இல்லை. இதன் காரணமாகவே, பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் தொடர்ந்து சிறையில் இருந்துவருகின்றனர்.
இதையும் படிக்க | உலகம் முழுவதும் கரோனா பலி 45 லட்சத்தைத் தாண்டியது!
இந்த வழக்கு வெளிப்படையாக ஒன்றை சுட்டிகாட்டுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை அலுவலர்களாக இருக்கின்றனர். இருப்பினும், விசாரணை அலுவலர்கள் ஆசிட் மாதிரிகளை சேகரித்து ரசாயன சோதனையை மேற்கொள்ள முயற்சி எடுக்கவில்லை. அதேபோல், பாதிக்கப்பட்டவர்களிடம் காயத்தின் தன்மை குறித்து கருத்து கேட்கவும் அவர்கள் முயற்சி எடுக்கவில்லை. எனவே, இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தில்லி காவல்துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கிறேன்" என்றார்.