கர்நாடகத்தில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவர் மருத்துவர் என்றும் அவருடன் தொடர்பிலிருந்தவர்களுள் ஐந்து பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது:
"பெங்களூருவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட 46 வயது மிக்க நபர் ஒரு மருத்துவர். உடல் சோர்வு, உடம்பு வலி மற்றும் லேசான காய்ச்சல் இருந்துள்ளதையடுத்து, அவர் தாமாகவே பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதையும் படிக்க | ஒமைக்ரான்: தொடர்பில் இருந்த 5 பேருக்கு கரோனா
அவரது பரிசோதனை முடிவுகளில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், சிடி மதிப்பீடு குறைவாக இருந்தது. பிறகு ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவர் எந்தப் பயணமும் மேற்கொள்ளவில்லை. மருத்துவருடன் தொடர்பிலிருந்தவர்களில் 5 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மொத்தம் 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எவருக்கும் எவ்விதத் தீவிர அறிகுறியும் தென்படவில்லை. அவர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்.
66 வயதுமிக்க நபர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். அவர் நாடு திரும்பிவிட்டார்" என்றார் அவர்.