கர்நாடகத்தில் ஒமைக்ரான் பாதித்த இருவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இன்று அறிவித்தது. மேலும் ஒமைக்ரான் வகை கரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரும் அடையாளம் காணப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்தார்.
இதையும் படிக்க- ஒமைக்ரான் பாதித்த நாடுகளின் பட்டியலில் இணைந்தது இந்தியா
இந்த நிலையில் ஒமைக்ரான் பாதித்த 46 வயதான நபருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 5 நபர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒமைக்ரான் உறுதியான 2 பேரில் ஒருவர் தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் என கர்நாடக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட இருவர் யார்? கர்நாடக அமைச்சர் விளக்கம்
கர்நாடகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வயது 66. மற்றொருவரின் வயது 46 என்பது குறிப்பிடத்தக்கது.