புது தில்லி: புது தில்லியில், டிசம்பர் 16ஆம் தேதி மாலை, செல்லிடப்பேசியை பறிக்க முயற்சித்தபோது, பெண்ணை, சாலையில் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற கொடூரம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
புது தில்லியில், நிர்பயா சம்பவத்தின் மூலம் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியான அதே நாளில், இதுபோன்றதொரு சம்பவம் தில்லியில் பதிவாகியுள்ளது.
ஷாலிமர் பாக் பகுதியில், வியாழக்கிழமை மாலை, செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டு சென்ற 23 வயது பெண்ணிடமிருந்து, இருசக்கர வாகனத்தில் சென்ற கொள்ளையர்கள், செல்போனை பறிக்க முயன்றனர்.
அப்போது, அப்பெண், கொள்ளையர்களில் ஒருவனது சட்டையைப் பிடித்துக் கொண்டு விடாததால், இருசக்கர வாகனத்தில் சென்ற கொள்ளையர்கள், அப்பெண்ணை சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்றது அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண், அங்கிருக்கும் மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியர் என்பது தெரிய வந்தது. காயமடைந்த அவர், அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளையர்களில் ஒருவரைப் பிடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.