தமிழ்த்தாய் வாழ்த்து மாநில பாடலாக அறிவிப்பு: பாடும்போது எழுந்து நிற்க அரசு உத்தரவு

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை, தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து மாநில பாடலாக அறிவிப்பு: பாடும்போது எழுந்து நிற்க அரசு உத்தரவு
தமிழ்த்தாய் வாழ்த்து மாநில பாடலாக அறிவிப்பு: பாடும்போது எழுந்து நிற்க அரசு உத்தரவு


சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை, தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதுபோல, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்படும்போது, இனி அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களில் நிகழ்ச்சி தொடங்கும்போது, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும். அப்போது, இசைவட்டுகளில் இசைப்பதற்கு பதிலாக வாய்ப்பாட்டாக பாட வேண்டும்.  தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது மாற்றுத்திறனாளிகள் மட்டும் எழுந்து நிற்க விலக்கு அளிக்கப்படுகிறது.

எனவே, இனி தமிழ்த்தாய் வாழ்த்துப் இசைக்கப்படும்போது, அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல், 55 வினாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் மூன்றன் நடையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது,

தமிழர்களின் வாழ்வாக அவர்தம் உணர்வுக்கு ஒளியாகத் திகழ்வது தமிழ் மொழி. அத்தகைய ஒப்புயர்வற்ற உயர்தனிச் செம்மொழியாம் இலக்கண, இலக்கிய வளங்கள் நிறைந்த தமிழ் மொழியைத் தாயாகப் போற்றும் தமிழர், தம் அன்னையை வாழ்த்திப் பாட பொதுவான பாடல் ஒன்றை ஏற்கவேண்டும் என்ற உள்ளக்கிடக்கையை ஒரு நூற்றாண்டுக்கும் முன்னதாகவே வெளிப்படுத்தியுள்ளனர். இதனைத் தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும், இலக்கிய அமைப்புகளும், தமிழ்ச் சங்கங்களும், பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய “நீராரும் கடலுடுத்த’’ எனும் பாடல் பாடப்பட வேண்டும் எனும் கோரிக்கை 1913ஆம் ஆண்டைய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டறிக்கையில் இடம் பெற்றது.

இந்தப் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக, 1914 ஆம் ஆண்டு முதல், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் பாடி வந்துள்ளார்கள். மேலும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தாய்ச் சங்கமாகக் கொண்டு தமிழகத்தின் பல பகுதிகளில் உருவான தமிழ்ச் சங்கங்களின் விழாக்களிலும் தொடக்கப் பாடலாக இப்பாடல் பாடப்பட்டது.

இதனை தமிழக அரசின் பாடலாக அறிவிக்க வேண்டும் என்று அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களுக்கு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர் கோரிக்கையாக எழுதி அனுப்பியும் வைத்தார்கள். தமிழறிஞர்கள், ஆர்வலர்கள், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று, 1970 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 11 ஆம் தேதியன்று  நடந்த அரசு விழாவில் அன்றைய முதல்வர் கருணாநிதி பேசும் போது, "இனி தமிழக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும். "நீராருங் கடலுடுத்த" எனும் மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய பாடலே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக அமையும்’’ என்று அறிவித்தார்கள்.

அதன்படியே 1891ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புகழ்பெற்ற நாடக நூலான  மனோன்மணீயம்  நூலில் உள்ள பாயிரத்தில் “தமிழ்த் தெய்வ வணக்கம்’’  எனும் தலைப்பிலுள்ள பாடலின் ஒரு பகுதியை தமிழ்த்தாயைப் போற்றும் வகையில் அமைந்த வரிகளை ஏற்று, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை 23 நவம்பர் 1970ஆம் ஆண்டு அன்று, கருணாநிதி தலைமையில் அமைந்த அன்றைய  தமிழக அரசு  தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து, அரசாணையும் வெளியிட்டுள்ளது.

அவ்வரசாணையைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அரசு விழாக்களில், கல்வி நிலையங்களில், பொது நிறுவனங்களில், பொது நிகழ்ச்சிகளின் போது நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படுவது குறித்து, சில வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டிய காலச் சூழ்நிலையை ஒட்டி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் மூலம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து, பயிற்சி பெற்றவர்கள், நிகழ்ச்சியில் பாடவேண்டும் எனவும் சமீபத்தில் ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நேர்வில் அன்னைத் தமிழ் மொழியைப் போற்றிடும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படுவதை ஒருங்கிணைத்து, நெறிமுறைப்படுத்த வேண்டிய நிலையில், கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1. மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய கீழ்க்கண்ட வரிகளைக் கொண்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்படுகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்தின் கீழ்க்கண்ட வரிகள், 55 வினாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் (மோகன ராகம்) மூன்றன் நடையில் (திசுரம்)  பாடப்படவேண்டும், 


நீராரும்  கடலுடுத்த  நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!”

2. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.

3. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும்.

4. மாற்றுத் திறனாளிகளுக்கு இவ்வரசாணையின்படி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படும் போது எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

5. பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும்.

6. அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்வதிலும், இளம்தலைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்பதிலும், பொதுமக்களும், தனியார் அமைப்புகளும் பெரும்பங்காற்ற முடியும் என்பதால், தமிழ்நாட்டில் நடைபெறும் தனியார் அமைப்புகள் நடத்திடும் கலை, இலக்கிய மற்றும் பொதுநிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது ஊக்குவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com