நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி மசோதாக்களை தாக்கல் செய்வதே பாஜகவின் நோக்கம் என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29 முதல் நடைபெற்று வந்த நிலையில், ஒருநாள் முன்னதாகவே இரு அவைகளிலும் முடிக்கப்பட்டது.
இந்நிலையில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:
குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் போதே 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மழைக்கால கூட்டத்தொடரில் நடந்த சம்பவத்திற்காக குளிர்காலக் கூட்டத்தொடரிலிருந்து நீக்குவது முற்றிலும் தவறான செயல். வேலையின்மை, பண வீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை விவாதிக்க திட்டமிட்டு இருந்தோம்.
மசோதாக்களை விவாதமின்றி உடனடியாக நிறைவேற்றுவதே பாஜகவின் எண்ணமாக இருக்கின்றது. அவர்களுக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதாக்கள் மீது வாக்கெடுப்பை விரும்பாத அவர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களை குறைக்க முடிவு செய்தனர். அதனால்தான் கூட்டத்தொடர் தொடங்கியவுடன் 12 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்தனர்.