தில்லி எல்லைக்குள் நுழைந்த விவசாயிகள் மீது உள்ளூர் மக்கள் பூக்களைத் தூவி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 60 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் தலைநகர் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தின் ஒருபகுதியாக குடியரசு நாளான இன்று தில்லியில் விவசாயிகள் இணைந்து மாபெரும் டிராக்டர் பேரணியை முன்னெடுக்கின்றனர். இதில் லட்சக்கணக்கான டிராக்டர்களுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 100 கிமீ தூரத்துக்கு பேரணியில் ஈடுபடுகின்றனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு கட்டுப்பாடுகளுடன் போராட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி அளித்தனர். காலை 11.30 மணியளளவில் பேரணியைத் துவங்கவிருப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்த நிலையில் இன்று காலை 8 மணிக்கே திக்ரி எல்லையில் போராட்டத்தைத் துவங்கினர். போலீஸாரின் தடுப்புகளை மீறி சிங்கு எல்லையில் நுழைந்து தற்போது மத்திய தில்லியை நோக்கி பேரணி நடந்துகொண்டு இருக்கிறது.
இந்நிலையில், காசிப்பூர் எல்லைக்கு அருகிலுள்ள ஸ்வரூப் நகரில் உள்ள மக்கள், அவ்வழியே வந்த விவசாயிகள் மீது மலர்களைத் தூவினர்.
காசிப்பூர் எல்லை - அப்ஸ்ரா எல்லை - ஹப்பூர் சாலை - ஐ.எம்.எஸ் கல்லூரி - லால் குவான் - காசிப்பூர் எல்லை பாதையில் பேரணி நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் தில்லி எல்லைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த, ஃபரிதாபாத்-பல்வால் எல்லையில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.