மகாராஷ்டிரத்தில் வனப் பகுதியில் காவல்துறையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 26 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
மகாராஷ்டிரம் மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தின் கியாரப்பட்டி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர், மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள், காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் இருத்தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் 26 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் காவல்துறை தரப்பில் 4 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கடந்த மே மாதம் இதே மாவட்டத்தில் 7 பெண்கள் உட்பட 13 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.