தில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பொதுப் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்க கோரி பேரிடர் மேலாண் ஆணையத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த சில நாள்களாக தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகளவிலான வாகனங்கள் இயக்கம், தொழிற்சாலைகள், பயிர்க்கழிவுகள் எரிப்பு காரணமாக கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக தில்லியில் பேருந்து, மெட்ரோ ரயில்களில் பயணிகல் நின்று பயணம் செய்ய தில்லி பேரிடர் மேலாண் ஆணையம் விதித்திருக்கும் தடையை நீக்கக் கோரி அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், தனியார் பேருந்துகளை ஒப்பந்தம் செய்து பொதுப் போக்குவரத்தை அதிகரிக்கவும் அந்த கடிதத்தில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.