புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,865 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 287 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 8,865 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,30,793-ஆக உள்ளது. இது 525 நாள்களுக்குப் பிறகு மிகக் குறைவான எண்ணிக்கையாகும்.
மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் நோயாளிகள் எண்ணிக்கை 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அது தற்போது 0.38 சதவீதமாக உள்ளது. இது 2020 மார்ச் மாதத்துக்குப் பிறகு பதிவாகும் குறைந்த அளவாகும். குணமடைந்தோர் விகிதம் 98.27 சதவீதமாகும்.
நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 112.97 கோடியாக அதிகரித்துள்ளது.