புது தில்லி: நிறுவனங்கள் அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு அளிக்க வேண்டிய அபாயம் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 77-ஆவது இடத்திலிருந்து 82-ஆவது இடத்துக்குச் சென்றுள்ளது.
ஊழலுக்கு எதிரான தர நிர்ணய அமைப்பான டிரேஸ், இதுகுறித்து வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தொழில்முனைவோரும் நிறுவனங்களும் அரசு அதிகாரிகள் மற்றும் பிறருக்கு கையூட்டு அளிக்க வேண்டிய அபாயத்துக்கான தரவரிசைப் பட்டியலில், கடந்த ஆண்டு இந்தியா 77-ஆவது இடத்தில் இருந்தது.
இந்த நிலையில், நடப்பாண்டுக்கான இந்தப் பட்டியலில் 44 புள்ளிகளைப் பெற்று இந்தியா 82-ஆவது இடத்துக்குச் சென்றுள்ளது.
எனினும், அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளைவிட இந்தியா அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளது.
மற்றோர் அண்டை நாடான பூடான் இந்தத் தரவரிசையில் 62-ஆவது இடத்தில் உள்ளது.
சர்வதேச அளவில் வடகொரியா, துருக்மெனிஸ்தான், வெனிசூலா, எரித்ரியா ஆகிய நாடுகளில் தொழிலுக்காக கையூட்டு செலுத்த வேண்டிய அபாயம் அதிக அளவில் உள்ளது.
ஆனால், டென்மார்க், நார்வே, ஃபின்லாந்து, ஸ்வீடன், நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் இந்த அபாயம் மிகக் குறைவாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றங்கள், ஊழல் தடுப்பு அமைப்புகள் செயலாற்றும் திறன், அரசு சேவைகளின் வெளிப்படைத்தன்மை, ஊடகம் உள்ளிட்ட சமூக அமைப்புகளின் செயலாற்றல் ஆகிய 4 அம்சங்களின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.