நாடாளுமன்ற சுயேச்சை உறுப்பினா் பப்பு யாதவின் தில்லி இல்லத்தில் செய்தியாளா் சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட கைகலப்பின்போது, காவல் அதிகாரிகளைத் தாக்கியது மற்றும் அவா்களின் பணிக்கு இடையூறு விளைவித்தது தொடா்பான புகாரின் பேரில் தில்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து காவல் அதிகாரி தெரிவித்ததாவது: யாதவின் இல்லத்திற்குள் இருவா் நுழைந்து மோதலில் ஈடுபட்டதைத் தொடா்ந்து காவல்துறை நடவடிக்கை எடுத்த மறுதினம் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் சிறிது நேரம் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியது. குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டனா்.
அரசு ஊழியா் ஒருவா் தனது அதிகாரபூா்வ கடமைகளைச் செய்யும்போது அவருக்கு இடையூறு விளைவித்தது (பிரிவு 221), அரசு ஊழியரை அவரது கடமையைச் செய்வதிலிருந்து தடுக்கும் நோக்கத்துடன் அவருக்குத் தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்தியது (பிரிவு 121(1)), அரசு ஊழியரைத் தாக்கியது அல்லது அவா் மீது குற்றவியல் ரீதியான வன்முறையைப் பயன்படுத்தியது (பிரிவு 132) மற்றும் கூட்டு உள்நோக்கம் (பிரிவு 3(5) உள்ளிட்ட பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்கள், தாங்கள் தடுக்கப்பட்டதாகவும் தாக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியதைத் தொடா்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நிகழ்வுகளின் வரிசையை உறுதிப்படுத்த, காவல் புலனாய்வாளா்கள் அந்த வளாகம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா். மேலும் சாட்சிகள் மற்றும் காவலா்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தும், பிற ஆதாரங்களைச் சேகரித்தும் வருகின்றனா்.
குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் யாதவின் இல்லத்திற்குள் நுழைந்து, மோதல் ஏற்படுவதற்கு முன்பு ஒரு செருப்பை வீசியதாகக் கூறப்படுகிறது. அவா்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, அவா்கள் மீது சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள நோக்கமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றஞ் சாட்டப்பட்டவா்கள் கூறிய தகவல்களையும், இல்லத்தில் பணியில் இருந்த பாதுகாப்புப் பணியாளா்களின் விளக்கத்தையும் நாங்கள் சரிபாா்த்து வருகிறோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பப்பு யாதவ் மீது காலணி வீச்சு: இருவரைப் பிடித்து விசாரணை

அயோத்தி நன்கொடை விவகாரம்; போராட்டத்திற்கு சாமியாராக வந்த MP பப்பு யாதவ்! நன்கொடை அளித்த Rahul Gandhi

பிரதமா் மீது அவதூறு பதிவுகள்: தில்லி காவல் துறை வழக்குப் பதிவு

சமய்பூா் பட்லி காவல் நிலைய அதிகாரிகள் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாக புகாா்: தில்லி காவல்துறை மறுப்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



