இந்தாண்டு இறுதிக்குள், சர்வதேச விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக விமான போக்குவரத்து துறை செயலாளர் ராஜீவ் பன்சால் இன்று தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு மார்ச் மாதம், நாடு முழுவதும் கரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், மீட்பு சேவை மற்றும் அத்தியாவசிய பொருள்களை எடுத்து செல்லும் சர்வதேச விமானங்களை தவிர்த்து அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.
கரோனா பாதிப்பு குறைந்து தடுப்பூசி செலுத்தப்படுவது அதிகரித்துள்ள நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதேபோல், பல்வேறு நாடுகளுடனும் 'ஏர் பபுள்' ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. கிட்டத்தட்ட 25 நாடுகளுடன், இந்தியா இதுபோன்ற ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
'ஏர் பபுள்' ஏற்பாட்டின் அடிப்படையில், சில கட்டுப்பாடுகளுடன் இந்தியாவிலிருந்து சில நாடுகளுக்கு மட்டும் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டன. இதற்கு மத்தியில், சர்வதேச விமான சேவையை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கான வழிமுறையை அரசு மேற்கொண்டுவருகிறது என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கடந்த வாரம் தெரிவித்தார்.
இதையும் படிக்க | பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "இயல்புநிலைக்கு திரும்புவதில் அரசு கவனம் செலுத்திவரும் அதே சமயத்தில் அதிகரித்துவரும் கரோனா பரவலுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக, பல ஐரோப்பிய நாடுகளில் அச்சப்படக் கூடிய அளவில் கரோனா அதிகரித்துள்ளது.
உலகில் சிவில் ஏவியேஷன் துறையில் எங்களின் இடத்தை மீண்டும் பெறுவதற்கும், இந்தியாவை விமான போக்குவரத்து துறை மையமாக உருவாக்குவதற்கும், விமான சேவையை மேலும் விரிவாக்கம் செய்வதற்கும் நான் முற்றிலும் ஆதரவாக இருக்கிறேன். அந்த இடத்திற்கு நாம் வருவோம். என்னை நம்புங்கள். நான் உங்கள் பக்கம் இருக்கிறேன். பாதுகாப்பான சூழலில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து வேலை செய்வோம்" என்றார்.