புதிய வகை கரோனா ஒரு தீவிர அச்சுறுத்தல் என்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.
உருமாற்றம் அடைந்த 'ஒமிக்ரான்'(பி.1.1.529) என்ற புதிய வகை கரோனா வைரஸ் தென்னாப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. முழுமையாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ் அதிக தீவிரம் கொண்டது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனைத் தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் 5 அண்டை நாடுகளிருந்து வரும் விமானங்களுக்கு பிரிட்டன், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.
இந்தியாவில் புதிய வகை கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு, 'புதிய வகை கரோனா தீவிர அச்சுறுத்தலாக உள்ளது. நாட்டு மக்களுக்கு தடுப்பூசி பாதுகாப்பை வழங்குவதில் அரசு தீவிரமாக இல்லை. தவறான தடுப்பூசி புள்ளிவிவரங்களை காட்டி நீண்ட காலத்திற்கு உண்மையை மறைக்க முடியாது' என்று குறிப்பிட்டுள்ளார்.