காங்கிரஸ் கட்சிக்கு வலிமையான தலைவர் தேவை என சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக தனது பதவியை ராகுல்காந்தி ராஜிநாமா செய்ததற்குபின் காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை தலைவர் நியமிக்கப்படவில்லை. சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக செயல்பட்டாலும் செயல்படக்கூடிய வகையில் தலைவர் இல்லாமல் இருப்பது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரெளத், “மிகப்பெரிய கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் இல்லாமல் இருப்பது இயற்கையாகவே குழப்பத்தை ஏற்டுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் மட்டுமல்லாது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தலைவர் இல்லாமல் இருப்பது தொண்டர்களிடையே அதிருப்தியைத் தான் ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பல் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் உடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்திருப்பது குறித்து கண்டனம் தெரிவித்த சிவசேனை கட்சி எல்லைப் பிரச்னையில் உண்மையான அக்கறை இருந்தால் மத்திய அரசு ஆட்சியில் உள்ள முதல்வருடன்தான் ஆலோசிக்க வேண்டுமே தவிர அமரீந்தர் சிங்குடன் ஆலோசிப்பதாகத் தெரிவிக்கக் கூடாது என விமரிசித்துள்ளது.