காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? காங்கிரஸ் செயற்குழுவில் நடந்தது என்ன?

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்பது குறித்து பரிசீலனை செய்வேன் என ராகுல் காந்தி அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் செயற்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை தழுவியதை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் விலகினார். கட்சிக்கு தலைமை இல்லாததால், காங்கிரஸில் இன்று வரை குழப்பம் நீடித்துவருகிறது. இதற்கு மத்தியில், அக்கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார்.

இதன் பின்னர், நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வியே மிஞ்சின. அமைப்பு ரீதியாக காங்கிரஸ் கட்சியில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இந்த 23 பேர்தான் 'ஜி-23' தலைவர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். 

இதையடுத்து, கடிதம் எழுதிய ஜிதின் பிரசாதா காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, பல்வேறு விவகாரங்களை முன்வைத்து 'ஜி-23' தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துவந்தனர். குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

இதற்கு மத்தியில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய சோனியா, "இதை சொல்ல நீங்கள் அனுமதித்தால், நான்தான் காங்கிரஸ் கட்சியின் முழு நேர தலைவர் என்பதை சொல்வேன். அனுபவம் வாய்ந்த காங்கிரஸ் தலைவர். நான் எப்போதும் வெளிப்படைதன்மையை பாராட்டியுள்ளேன். ஊடகம் வழியாக பேச வேண்டிய தேவை இல்லை.

நேர்மையான சுதந்திரமான இந்த விவாதத்தில் கலந்து கொள்வோம். இங்கு அனைவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளை மட்டுமே வெளியே தெரிவிக்க வேண்டும். மன்மோகன் சிங், ராகுல் ஆகியோரைப் போலவே நானும் மற்ற தலைவர்களை பிரதமருடன் அழைத்துச் சென்று பேசியிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். 

நான் ஒத்த எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகளுடன் தொடர்ந்து உரையாடி வருகிறேன். நாம் தேசிய பிரச்னைகள் குறித்து கூட்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளோம். நாடாளுமன்றத்திலும் எங்கள் வியூகத்தை ஒருக்கிணைத்துள்ளோம்" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com