ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள வெளியூரைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு ஆயுதங்கள் வழங்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ ஞானேந்திர சிங் ஞானு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாள்களாக வெளியூரைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டு வருகின்றனர். குல்கம் மாவட்டத்தில் வெளியூரைச் சேர்ந்த தொழிலாளர்கள் மூன்று பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் மூவரும் பிகாரைச் சேர்ந்தவர்கள் என சிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த வெள்ளிக்கிழமை பிகாரைச் சேர்ந்த தெருவோர வியாபாரி மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால், அங்கு பயம் கலந்த சூழல் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், காஷ்மீரில் பயங்கரவாதிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள வெளியூரைச் சேர்ந்த மக்களுக்கு மத்திய அரசு ஆயுதங்களை வழங்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ ஞானேந்திர சிங் ஞானு தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ஜம்மு - காஷ்மீர் தாக்குதல்: தீவிர கண்காணிப்பில் சிஆர்பிஎஃப் வீரர்கள்
அவர் கூறியதாவது:
"காஷ்மீரில் வெளியூரைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு ஆயுதங்கள் வழங்க வேண்டும். அதன்மூலம், அவர்கள் தங்களைத் தற்காத்துக்கொண்டு, பயங்கரவாதிகளுக்குப் பாடம் புகட்டுவார்கள். பஞ்சாபில் பயங்கரவாதம் பரவலாக இருந்தபோது ஏகே-47 ரக துப்பாக்கிகளை வைத்துக்கொள்ள மக்களுக்கு உரிமம் வழங்கப்பட்டன.
ஜம்மு-காஷ்மீரில் வசிக்கு்ம மக்களுக்கும் இதைச் செய்ய வேண்டும். வெளியூரைச் சேர்ந்த மக்களை ஒருங்கிணைத்து அவர்களைக் குறிப்பிட்ட ஒரு பகுதியில் வசிக்க வைத்து வேலைவாய்ப்பைத் தவிர்த்து தனிப்பட்ட பாதுகாப்பும், அரசுப் பாதுகாப்பும் வழங்க வேண்டும்.
ஏழை மக்களைக் குறி வைத்து தாக்கி பயங்கரவாத சூழலை உருவாக்க பயங்கரவாதிகள் முயற்சிக்கின்றனர்.
இந்த பயங்கரவாதிகள் கோழைகள். நமது எல்லைப் பாதுகாப்புப் படையுடனோ அல்லது ராணுவத்துடனோ சண்டைபோட அவர்களுக்குத் தைரியம் உள்ளதா? பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அல்லது பாகிஸ்தானால் ஈர்க்கப்பட்டு அவர்களது ஆதரவைப் பெற்றுக்கொண்டிருப்பவர்கள்தான் மக்களைக் கொல்கின்றனர்" என்றார் ஞானேந்திர சிங் ஞானு.