கதையல்ல நிஜம்: ஆறு மகள்களையும் மருத்துவர்களாக்கிய கேரள தம்பதி

சில சமயங்களில் உண்மைச் சம்பவங்கள் கற்பனைகளையும் விட சுவாரஸ்யமாக இருந்துவிடுவதுண்டு. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் நடபுரத்தில் அகமது குட்டி- ஸைனா அகமது தம்பதியின் வாழ்க்கையும் அப்படித்தான்.
ஆறு மகள்களையும் மருத்துவர்களாக்கிய கேரள தம்பதி; குவியும் பாராட்டு
ஆறு மகள்களையும் மருத்துவர்களாக்கிய கேரள தம்பதி; குவியும் பாராட்டு


சில சமயங்களில் உண்மைச் சம்பவங்கள் கற்பனைகளையும் விட சுவாரஸ்யமாக இருந்துவிடுவதுண்டு. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் நடபுரத்தில் அகமது குட்டி- ஸைனா அகமது தம்பதியின் வாழ்க்கையும் அப்படித்தான்.

ஸைனாவுக்கு ஆறு மகள்கள் பிறந்தனர். ஆனால் அதற்காக தம்பதியர் கவலைப்படவில்லை. மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக மாற வேண்டும் என்று விரும்பினர். அதற்காக தங்களது மகள்களுக்கு நல்ல கல்வியை அளிக்க அகமது முடிவு செய்தார். 

அது நிஜமாக பெரிதாக எந்தப் பிரச்னையும் இல்லை. ஆறு மகள்களும் நன்கு படித்தனர். அனைவரும் தற்போது மருத்துவர்களாக உள்ளனர்.

அகமதுவின் முதல் நான்கு மகள்களும் தற்போது மருத்துவம் பயின்று மருத்துவத் துறையில் பணியாற்றி வருகிறார்கள். ஐந்தாவது மகள் சென்னையில் எம்பிபிஎஸ் இறுதியாண்டும், கடைக்குட்டி மங்களூருவில் எம்பிபிஎஸ் முதலாமாண்டும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் இன்னும் கூடுதல் சிறப்பு என்னவென்றால், முதல் நான்கு மகள்களின் கணவர்களும் மருத்துவர்கள்தான். கத்தாரில் பணியாற்றி வந்த அகமது, தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கத்தாரில் வசித்து வந்துள்ளார்.

தான் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு அது நடக்காமல் போனதால், தனது ஆறு மகள்களையும் மருத்துவராக்கிவிட்டார். மகள்களின் திருமணத்தின் போது, இருவரும் ஒரே துறையில் இருந்தால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியும், விட்டுக் கொடுத்துப் போவார்கள் என்பதால், மருத்துவம் படித்த மணமகன்களை தேர்வு செய்ததாகவும் கூறுகிறார்.

சுமார் 35 ஆண்டுகள் கத்தாரில் பணியாற்றிவிட்டு, தம்பதிகள் தங்களது மகள்களுடன் கேரளம் திரும்பிவிட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அகமது மாரடைப்பால் மரணமடைந்தார். அப்போது இரண்டு மகள்களுக்கு மட்டுமே திருமணமாகியிருந்தது. தனது கணவரின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் மற்ற 2 மகள்களுக்கும் மருத்துவர்களையே மணமுடித்து வைத்ததோடு, கடைசி 2 மகள்களை மருத்துவம் பயில ஊக்கத்துணையாக இருந்து வருகிறார் ஸைனா.

இதைப் படிக்கும் போதே ஏதோ ஒரு இனிய கனவு போலத் தோன்றலாம். ஆனால், ஒரே நாளில் ரோமப் பேரரசு கட்டப்படவில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப, எப்படிப்பட்ட கனவும் நனவாக முயற்சி முக்கியம். அதற்கு இந்தக் குடும்பமே சாட்சியாக உள்ளது.

இதுவரை இந்த மகள்கள் ஒன்றாக சேர்ந்து தனது அப்பா இருக்கும் போது புகைப்படமே எடுத்துக் கொள்ளவில்லையாம். அவர் எங்களது இதயத்தில் இருக்கிறார் என்கிறார்கள் கண்கலங்கியபடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com