இயற்கை விவசாயம் குறித்து நாடு முழுவதும் வழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் கேரள மாணவி பிரதமர் மோடிக்கு மரக்கன்றை பரிசாக வழங்கியுள்ளார். இதையடுத்து, சிறுமி கிராமத்தில் வளர்த்த கொய்யா மரக்கன்று பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடப்படவுள்ளது.
கேரளாவில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஜெயலட்சுமி என்ற மாணவி வழங்கிய பரிசை தில்லி சென்ற பாஜக எம்பி சுரேஷ் கோபி பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார். மரக்கன்றை பிரதமர் மோடியிடம் வழங்குவது போன்ற புகைப்படத்தை சுரேஷ் கோபி, தனது பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க | வேலைவாய்ப்புகளை கெடுக்கும் மோடி அரசு: ராகுல் காந்தி விமரிசனம்
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "பத்தனம்திட்டாவில் குளநாடா கிராமத்தை சேர்ந்த அறிவாற்றல் மிக்க இளம் மாணவி வளர்த்த மரக்கன்று, இந்திய பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடப்படவுள்ளது" என பதிவிட்டுள்ளார்.
மேலும், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் மரக்கன்று நடப்படும் என மோடி உறுதி அளித்ததாக சுரேஷ் கோடி, பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஜெயலட்சுமி, சிறந்த மாணவிக்கு அளிக்கப்படும் 'கர்ஷக திலகம்' என்ற மாநில அரசின் விருதை பெற்றவர் ஆவார்.