ஜூலை மாதத்தை ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் 15 லட்சம் வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ளது என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தரவுகள் வெளியிட்டுள்ளதை மேற்கோள்காட்டிய காட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமரிசித்துள்ளார்.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட தேசிய பணமாக்குதல் திட்டத்தின் மீது விமர்சனங்களை முன்வைத்துவரும் ராகுல் காந்தி, மோடி தலைமையிலான அரசு வேலைவாய்ப்புகளை கெடுத்துவருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் இந்தியில் பதிவிட்டுள்ள அவர், "மோடி அரசு வேலைவாய்ப்புகளை கெடுத்துவருகிறது. வர்த்தகத்தையும் வேலைவாய்ப்புகளை ஊக்கும் வகையில் அவர்கள் செயல்படுவதில்லை. ஏற்கனவே, வேலை செய்பவர்களின் பணியை கூட பறிக்கின்றனர்.
இதையும் படிக்க | இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் முயற்சியில் தலிபான்கள்
போலியான தற்சார்பை மக்களிடமிருந்து எதிர்பார்க்கின்றனர். பொதுமக்களின் நலன் கருதி இதை கூறுகிறேன். குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கு ஆதரவாகவே மத்திய அரசு செயல்படுகிறது" என்றார்.
ஜூலை மாதம் 8.3 சதவிகிதமாக இருந்த நகர்புற வேலையின்மை, ஆகஸ்ட் மாதம் 9.78 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கரோனா இரண்டாம் அலையின்போது, இது 7.2 சதவிகிதமாக இருந்தது. பொருளாதாரம் மீண்டெழுந்துவருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், வேலையில்லா திண்டாட்டம் உயர்ந்திருப்பதாக தரவுகள் கூறுகின்றன.