கரோனாவால் பலியானவர்களின் குடும்பத்திற்கு தேசிய பேரிடர் மேலாண்மை பரிந்துரைத்த இழப்பீட்டுத் தொகை ரூ.50 ஆயிரம் போதுமானதாக இல்லை என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றால் பலியானோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை 6 வாரங்களுக்குள் பரிந்துரைக்குமாறு தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்துக்கு (என்டிஎம்ஏ) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘‘கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 நிவாரணத் தொகை அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், மாநில அரசுகள் தங்கள் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகையை அளிக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா, “கரோனாவால் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.50000 மட்டும் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது போதுமானதல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கரோனா அலையால் நாடு முழுவதும் பல்வேறு குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்தும், பலர் வேலையிழந்தும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சுப்ரியா கரோனாவால் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.