கொடூரத்தின் உச்சம்: மனைவி தூக்கிட்டுத் தற்கொலை; விடியோ எடுத்த கணவன்

குடும்பத் தகராறில் மனம் உடைந்த மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்காமல், விடியோ எடுத்த கணவரை ஆந்திர மாநில காவல்துறை கைது செய்துள்ளது.
கொடூரத்தின் உச்சம்: மனைவி தூக்கிட்டுத் தற்கொலை; விடியோ எடுத்த கணவன்


நெல்லூர்: குடும்பத் தகராறில் மனம் உடைந்த மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்காமல், விடியோ எடுத்த கணவரை ஆந்திர மாநில காவல்துறை கைது செய்துள்ளது.

இளகிய மனம் படைத்தோரும், குழந்தைகளும், சிறுவர், சிறுமிகளும் காண முடியாத வகையில் இருக்கும் அந்த விடியோ பல்வேறு சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்த விடியோவில், குடும்பச் சண்டை முற்றி, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டும் மனைவியை, போ.. தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள். போ போ என்று கூறும் கணவன், ஒரு கட்டத்தில் மனைவி தனது முடிவில் உறுதியாக இருக்கிறார், அவர் தூக்கிட்டு உயிருக்காக துடிதுடிக்கிறார் என்பதைப் பார்த்த பிறகும் கூட மனமிறங்காமல், தான் கொண்ட பணியிலிருந்து கொஞ்சமும் பின்வாங்காமல், தொடர்ந்து அதனை விடியோ எடுப்பதிலேயே உறுதியாக இருந்தார்.

தனது செல்லிடப்பேசியில், தனது மனைவி தூக்கிட்டு துடிதுடிக்க தற்கொலை செய்வதை விடியோ படமெடுத்த கணவன் அதோடு நிற்கவில்லை. அந்த நடுநடுங்கச் செய்யும் விடியோவை, அப்பெண்ணின் சகோதரருக்கும் அனுப்பியுள்ளார்.

ஆந்திரப் பிரதேசம், நெல்லூர் மாவட்டம் அட்மகூர் நகரில், 38 வயதாகும் பெஞ்சலைய்யா, ஏடிஎம் மையத்தில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி கொண்டம்மாவின் (31) நடத்தை மீது சந்தேகப்பட்டு அவ்வப்போது தகராறு செய்வது வழக்கமாக இருந்துள்ளது.

சில நாள்களுக்கு முன்பு, இவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கொண்டம்மா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். ஆனால், அவரைத் தடுக்காத பெஞ்சலைய்யா, நான் உன்னை தடுக்க மாட்டேன், உன் உயிரை மாய்த்துக் கொள்வதாக இருந்தால் செய். இந்த விடியோவை உனது சகோதரனுக்கு காண்பிப்பேன் என்று கூறி விடியோவை எடுத்துள்ளார்.

இந்த விடியோவில், தான் தற்கொலை செய்து கொள்ள முயலும் போது, தனது கணவர் நிச்சயம் தடுத்து நிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பு அந்த பெண்ணின் கண்களில் தெரிவது பதிவாகியுள்ளது. ஆனால் அவர் எதிர்பார்த்தது போல நடக்கவில்லை. தூக்கில் தொங்கி துடிதுடித்துக் கொண்டிருக்கும் போதும், பெஞ்சலைய்யா விடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

பிறகு, அந்த விடியோவை மனைவியின் சகோதரருக்கு அனுப்பியுள்ளார். இந்த விடியோவைப் பார்த்ததும், பெண்ணின் பெற்றோர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க, பெஞ்சலைய்யா கைது செய்யப்பட்டார்.

தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதை தடுத்து நிறுத்தாமல், விடியோ எடுத்தது மட்டுமல்லாமல், அதனை சகோதரருக்கும் அனுப்பிய நபர் பற்றிய செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com