தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் பற்றி பேசியதாகவும், அதை இங்கு பகிர முடியாது என்றும் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
சண்டிகரில் வியாழக்கிழமை மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அமரீந்தர் சிங் மேலும் பேசியது:
"நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுகிறேன்.
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து பேசினேன். அவற்றை இங்கு பகிர முடியாது. ஒரு கட்சி பெரும்பான்மையை இழந்தால், சட்டப்பேரவைத் தலைவர் முடிவெடுக்க வேண்டும். நான் காங்கிரஸில் இல்லை, பாஜகவில் இணையப்போவதும் இல்லை.
நான் ஏற்கெனவே கூறியதுதான். நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப்புக்கு சரியான நபர் அல்ல. அவர் போட்டியிட்டால் அவரை வெற்றி பெற விடமாட்டேன்" என்றார் அமரீந்தர்.
இதையும் படிக்க | ‘நான் அவர் இல்லைங்க’: தவறாக டேக் செய்வதால் கதறிய அம்ரீந்தர் சிங்!
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தில்லியில் அமித் ஷாவைச் சந்தித்தது அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பாஜகவில் இணையப்போவதாக வெளியானத் தகவல்களை உறுதி செய்யும் வகையில் சந்திப்பு அமைந்தது.
ஆனால் காங்கிரஸில் நீடிக்கும் எண்ணமில்லை என்றும், பாஜகவில் இணையப்போவதில்லை என்றும் அமரீந்தர் சிங் அலுவலகம் தரப்பில் வியாழக்கிழமை செய்தி வெளியிடப்பட்டது. அந்தக் கருத்தை உறுதி செய்யும் வகையில் அவரது செய்தியாளர் சந்திப்பும் தற்போது அமைந்துள்ளது.