புதுதில்லி: நாட்டில், முதல் முறையாக அதிவேகமாகப் பரவக் கூடிய உருமாறிய ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் ஒருவருக்கு பாதித்திருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மும்பையில் 376 பேரின் கரோனா மாதிரிகளை ஒமைக்ரான் தீநுண்மியின் மரபணு வரிசைமுறை பரிசோதனை நடத்தியதில், ஒருவருக்கு உருமாறிய ஒமைக்ரான்-எக்ஸ்இ தொற்றும், மற்றொருவருக்கு உருமாறிய கப்பா வைரஸ் தொற்றும் பாதித்திருப்பது தெரிய வந்திருப்பதாக மும்பை மாநகராட்சியின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய வகை ஒமைக்ரான்-எக்ஸ்இ பாதித்த நோயாளியின் உடல்நலம் சீராக இருப்பதாகவும், மோசமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகம் பரவும் திறன் கொண்ட ஒமைக்ரான் வைரஸைக் காட்டிலும் இந்த புதிய வகை ஒமைக்ரான்-எக்ஸ்இ வகை 10 மடங்கு கூடுதலாக பரவும் அபாயம் கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை ஒமைக்ரானின் உருமாற்றமடைந்த எக்ஸ்இ வகை கரோனா பரவவில்லை. தற்போது மும்பையில் உறுதி செய்யப்பட்ட ஒமைக்ரான்-எக்ஸ்இ ரக வைரஸ் என்பதை நிரூபிக்க போதுமானதாக ஆதாரங்கள் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் கடந்த ஜனவரி மாதம் கண்டறியப்பட்ட இந்த ஒமைக்ரான்-எக்ஸ்இ வகை வைரஸால் இங்கிலாந்து முழுவதும் இதுவரை 637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் ஏற்கனவே பரவிய கரோனா வைரஸ்களைக் காட்டிலும், தற்போது பரவி வரும் இந்த உருமாறிய ஒமைக்ரான் - எக்ஸ்இ அதிகம் பரவும் திறன் கொண்டதாக இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.