பணமெடுக்க டெபிட் /கிரெடிட் அட்டைகள் ஏதுமின்றி யுபிஐ வசதியைப் பயன்படுத்தி, அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் பணமெடுக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தற்போது ஏடிஎம் அட்டை இல்லாமல் பணமெடுக்கும் வசதி ஒரு சில வங்கி தானியங்கி பணப்பரிவர்த்தனை மையங்களில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. தற்போது, அனைத்து தானியங்கி பணப்பரிவர்த்தனை மையங்களிலும் யுபிஐ வசதியைப் பயன்படுத்தி, அட்டைகள் இல்லாமல் பணமெடுக்கும் வாய்ப்பை வழங்க பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஏடிஎம் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் போது நடக்கும் ஸ்கிம்மிங், கார்டு குளோனிங் போன்ற முறைகேடுகள் மூலம் பண மோசடிகள் நடைபெறுவது குறைக்கப்படும் என்று ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
வங்கி வாடிக்கையாளர்கள், யுபிஐ வசதியைப் பயன்படுத்தி ஏடிஎம்களில் பணமெடுக்கும் புதிய வழிமுறை உருவாக்கப்பட்டு, இதுகுறித்து விரைவில் ஏடிஎம்கள் தொலைத்தொடர்பு மற்றும் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.