
கொல்கத்தா: கொல்கத்தா காவல்துறையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், போக்குவரத்தையும் ஒழுங்குப்படுத்திக் கொண்டே, 8 வயது சிறுவனுக்கு கல்வி கற்பிக்கும் போக்குவரத்துக் காவலர் பற்றிய செய்தி பல இதயங்களைத் தொட்டுள்ளது.
இதுபோன்ற செய்திகளோ தகவல்களோ சமூக வலைத்தளங்களில் பகிரப்படும்போது அது பலரையும் எளிதாக சென்றடைகிறது. அதுபோலத்தான், போக்குவரத்துக் காவலராக இருக்கும் ஒருவர், 8 வயது சிறுவனுக்கு கல்வி கற்பிக்கும் புகைப்படமும் வைரலாகியுள்ளது.
பிரகாஷ் கோஷ்.. கற்பிக்கும் காவலர். இவர் எப்போதெல்லாம் பல்லிகஞ்சே ஐடிஐ அருகே பணிக்கு வருகிறாரோ, அப்போது அங்கே ஒரு 8 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்துள்ளார். சிறுவனை விசாரித்தபோது, அவரது தாய் சாலையோர உணவகத்தில் வேலை செய்வதும், வீடில்லாமல் சாலையோரம் வசித்து வருவதும், எப்படியோ ஒரு அரசுப் பள்ளியில் சேர்க்கை பெற்றிருப்பதும் தெரிய வந்தது.
ஏழ்மையில் உழலும் சிறுவனுக்கு படிப்பின் மீது ஆர்வம் போகவில்லை. 3ஆம் வகுப்பில் படிக்கும் சிறுவனுக்கு படிப்பில் ஆர்வம் இல்லாதது, மற்ற கவலைகளுடன் மேலும் ஒரு கவலையாக சேர்ந்து கொண்டது தாய்க்கு.
இதனைப் போக்க முன் வந்துள்ளார் பிரகாஷ் கோஷ், தன்னால் இயன்ற உதவியுடன், அப்பகுதியில் சாலைப் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திக் கொண்டே, சிறுவனுக்கு பாடங்களை சொல்லிக் கொடுத்துள்ளார். வீட்டுப் பாடங்கள் எழுத உதவி செய்வது, புரியாத பாடங்களை சொல்லிக் கொடுப்பது என பிரகாஷ் கோஷ், தனது கடமைக்கு இடையே ஒரு சமூகக் கடமையையும் ஆற்றி வருகிறார்.
எந்த கைம்மாறும் விளம்பரமும் இல்லாமல் இவர் செய்து வந்த இந்த சமூகப் பணி குறித்து செய்தியாளர் ஒருவர் புகைப்படத்துடன் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட அது சில மணி நேரங்களில் பல விருப்பங்களை (லைக்) குவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.